விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் (2022).
முழு முதற் கடவுளான விநாயகரின் பிறந்த நாள் விநாயக சதுர்த்தி என்னும் பெயரில் ஹிந்துக்களால் வருடந்தோறும் ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வருகின்ற சதுர்த்தி திதியன்று (31.8.2022) கொண்டாடப்பட்டு வருகின்றது.
கைலாய மலையில் அன்னை பார்வதி தேவி குளிப்பதற்கு முன்னர் நந்தி தேவரிடத்தில் தாம் குளிக்கப் போவதாகவும் குளித்து முடியும் வரையில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் எனவும் சொல்லிவிட்டு குளிக்கச் சென்ற சமயம் சிவ பெருமான் பார்வதி தேவியை அவசரமாக காண முற்பட்ட சமயம் நந்தி தேவர் சிவபெருமானை பார்வதி தேவியைக் காண அனுமதித்த காரணத்தால் நந்தி தேவர் சிவபெருமானுக்கு மாத்திரம் விசுவாசமாக நடந்து கொள்வதாகவும் தம்மீது அவ்வாறான விசுவாசம் இல்லாமல் தம்மை உதாசீனம் செய்வதாகவும் சொல்லி கோபித்துக் கொள்கின்றார்.
பார்வதி தேவி ஒரு நாள் குளித்துக் கொண்டிருக்கும் சமயம் உடலில் பூூசிக்கொள்ளும் மஞ்சள் கொண்டு ஒரு உருவத்தினை உருவாக்கி அந்த உருவத்திற்கு கணேச மூர்த்தி எனப் பெயரிட்டு உயிர் கொடுத்து கணேசன் தான் தமது விஸ்வாசமுள்ள மகன் எனச் சொல்கின்றார். அதன் பின்னர் பார்வதி தேவி தமது மகனான கணேச மூர்த்தியிடத்தில் தாம் குளிக்கும் சமயத்தில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் எனக் கட்டளையிட்டுவிட்டு குளிக்க சென்ற சமயம் கணேச மூர்த்தி தமது கடமையை விஸ்வாமாகச் செய்யும் வேளையில் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
சிவபெருமான் கைலாயத்திற்கு வந்த சமயம் புதிதாக இருக்கும் கணேச மூர்த்தி சிவபெருமான் யாரென்று தெரியாமல் அவரை அனுமதிக்காத காரணத்தால் சிவபெருமான் கோபமடைந்து கணேச மூர்த்தியின் கட்டளையை மீறி உள்ளே செல்ல நினைத்த சமயம் கணேச மூர்த்தி பார்வதி தேவியால் படைக்கப்பட்ட காரணத்தால் சிவ பெருமானின் அனைத்து முயற்சிகளும் வீணாகி விடுகின்றன.
எனவே சிவபெருமான் அந்தச் சிறுவனிடத்தில் சண்டையிட ஆரம்பித்து பார்வதி தேவியால் படைக்கப்பட்ட சிறுவன் தலை துண்டாகி காணாமல் போய் உயிரிழக்க நேரிடுகின்றது. இந்நிலையில் சிவபெருமானால் படைக்கப்பட்ட அண்டசராசரங்களில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதென பார்வதி தேவி முடிவெடுக்கின்றார்.
நடந்தது என்னவென்று தெரியாமல் நிகழ்ந்த தவறுக்கு பிராயச்சித்தமாக பார்வதி தேவியை சாந்தப்படுத்த வேண்டி சிவ பெருமான் படைக்கும் கடவுளான பிரம்ம தேவரிடத்தில் முறையிட பிரம்மன் இறந்து கிடந்த ஒரு யானையின் தலையினை கொண்டு வந்து யானையின் தலையினை பார்வதி தேவியால் படைக்கப்பட்டு சிவபெருமானால் கொல்லப்பட்ட சிறுவனின் தலைக்குப் பதிலாக யானையின் தலையினை இறந்து கிடக்கும் சிறுவனின் கழுத்தில் சேர்த்து மீண்டும் புத்துயிர் கொடுக்கின்றார். அதன் பின்னர் சிவபெருமான் அனைவரும் எந்தக் காரியத்தையும் செய்வதற்கு முன்னர் தமது மகனான கணேச மூர்த்திக்கு அதாவது விநாயகருக்கு முதலாவதாக வழிபாடு செய்து விட்டு அதன் பின்னர் தான் அனைத்து செயல்களையும் செய்ய வேண்டுமென உத்தரவிடுவதாக பார்வதி தேவியிடம் சொல்ல பார்வதி தேவி சாந்தமடைகின்றார்.
இவ்வாறு விநாயகர் பார்வதி தேவியின் கரங்களால் உருவாக்கப்பட்டு சிவபெருமானால் தமது மகன் என ஏற்றுக் கொள்ளப்பட்ட தினம் விநாயகருக்கு பிறந்த நாளாக விநாயக சதுர்த்தி என்னும் பெயரில் கொண்டாடப் படுகின்றது.
விநாயகருக்கு ஏன் அருகம்புல் மாலை அணிவிக்கப்படுகின்றது?
முன்னொரு காலத்தில் அனலாசூரன் என்னும் அரக்கன் தேவர்களை அடக்கியாள முயற்சித்தான். அந்த அரக்கனது கர்ச்சனை மிக ஆக்ரோஷமானதாக இருக்கும். அரக்கனது இரண்டு கண்களிலிருந்து அக்கினி சுவாலைகள் அனலாக பறக்கும். எனவே அந்த அரக்கனிடமிருந்து தங்களைக் காக்குமாறு தேவர்கள் அனைவரும் விநாயகப் பெருமானிடம் தஞ்சமடைந்தனர்.
அப்போது நடைபெற்ற போரில் விநாயகப் பெருமான் வெற்றி அடைந்த போது அந்த அரக்கன் கண்களிலிருந்து வந்த அக்கினிச் சுவாலை விநாயகப் பெருமானை வெப்பமயமாக்கி விட்டது. அந்த வெப்பத்தை விநாயகப் பெருமானால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. விநாயகரது உடல் வெப்பம் அதிகரித்த காரணத்தால் அவர் அந்த வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் அவதியுற்றார்.
அச்சமயம் தேவர்கள் தங்களால் முடிந்த வரை சந்தனத்தை அரைத்துப் பூசி குளிர்ச்சியினைக் கொடுத்தனர்.
சந்திர தேவன் விநாயகர் தலையில் அமர்ந்து குளிர்ச்சியினைக் கொடுத்தார்.
அதேசமயம் மகாவிஷ்ணு தம்மிடமிருந்த தாமரையில் விநாயகப் பெருமானை அமர வைத்து குளிர்ச்சியூட்டினார்.
சிவன் தன் தலையில் இருந்த நாகத்தை விநாயகர் வயிற்றில் கட்டி குளிர்ச்சியூட்டினார்.
வருண பகவான் மழையினை விநாயகர் மேல் பொழியச் செய்து குளிர்ச்சியூட்டினர்.
ஆனால் விநாயாகருக்கு ஏற்பட்ட வெப்பம் குறைந்த பாடில்லை. அப்போது முனிவர்கள் அனைவரும் சேர்ந்து அருகம் புல்லை கொண்டு மாலை கட்டி விநாயகருக்கு சாத்துபடி செய்தனர். அருகம்புல் மீது அமர வைத்தனர். முப்பத்து முக்கோடி தேவர்களாலும் செய்ய முடியாத அரிய செயலிலை அதாவது விநாயகரின் வெப்பத்தை தணிக்கும் செயலினை அருகம்புல் கொண்டு முனிவர்கள் செய்து முடித்தனர். எனவே விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துபடி செய்கின்றோம்.
அரச மரத்திற்கு அடியில் ஏன் விநாயகர் அமர்ந்துள்ளர்?
அனைத்து மரங்களும் பூ கொடுக்கும் காய் கொடுக்கும் பழம் கொடுக்கும். ஆனால் அரசமரம் பூ காய் கனி எதுவும் கொடுக்காது. அரச மரத்தில் வெறும் இலைகள் மட்டுமே இருக்கும். இன்னும் சொல்லப் போனால் அனைத்து மரங்களின் பலகைகளையும் நாம் ஏதாவது ஒரு வகையில் பயன் படுத்த முடியும். ஆனால் அரச மரத்தின் பலகை அந்த அளவிற்கு பயன் படுத்த முடியாத அளவிற்கு இலேசாக இருக்கும். எனவே கட்டில் மேஜை நாற்காலி கதவு ஜன்னல் போன்றவற்றிக்கு பயன் படுத்த மாட்டார்கள். எனவே எவரும் அரசமரத்தினை பயிர் செய்து வளர்க்க மாட்டார்கள்.
ஆனால் அரச மரம் மட்டும் பிராண வாயுவை அதிகம் உற்பத்தி செய்யும். வேறு எந்த மரமும் இந்த அளவிற்கு பிராண வாயுவை உற்பத்தி செய்யாது. எனவே நமது முன்னோர்கள் நல்ல காரியங்கள் எதுவாயினும் அரச மரத்தை சுற்றி வந்து தேகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு அவ்வாறே செய்து வருகின்றார்கள். யாருமே பயிர் செய்யாமல் தாமாகவே வளரும் அரசமரம் அதிகமான அளவில் பிராண வாயுவை கொடுப்பதால் நாம் அனைவரும் நமக்குத் தெரியாமல் அந்த மரத்தினருகில் விநாயகர் விக்ரஹம் வைத்து வழிபட்டு வருவதைக் கடைப்பிடிக்கின்றோம்.
உடல் நலம் பெறவேண்டி பலர் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளும் சமயம் அரசமரத்திலிருந்து உற்பத்தியாகும் பிராண வாயு கை கொடுக்கும். மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் பிராண வாயுவை செலுத்தித் தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள். அந்த முறை தெரிந்தோ தெரியாமலோ நாம் அரச மரத்தை சுற்றி வந்து கடைப்பிடித்து வருகின்றோம்.
அதே போல குழந்தை பாக்கியம் பெற வேண்டியவர்கள் அரச மரத்தை சுற்றி வரும் சமயம் பிராண வாயு இயற்கையாக அதிக அளவில் கிடைக்கப் பெற்று குறைகள் ஏதேனும் இருந்தால் நிவர்த்தியாகும்.
பூஜை செய்வதற்கு ஏன் தேங்காய் மற்றும் வாழைப் பழத்தை உபயோகிக்கின்றோம்?
தேங்காயைச் சுற்றி நார் இருக்கும் நார் நீக்கி விட்டால் ஓடு இருக்கும் இரண்டாக உடைக்கும் சமயம் உள்ளே சுவையான நீர் இருக்கும். ஓட்டில் மூன்று கண்கள் இருக்கும். நாம் தேங்காயினை தான் சாப்பிடுவோம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தேங்காயில் விதை அதாவது கொட்டை இருக்காது.
அதே போல வாழைப்பழத்தில் விதை அல்லது கொட்டை இருக்காது. வாழைப்பழ தோலை உரித்து பழத்தை சாப்பிட்டு விட்டால் கொட்டை இருக்காது.
தேங்காய் மற்றும் வாழைப்பழம் இரண்டிலும் விதைகள் கிடையாது. எனவே தான் விதைகள் இல்லாமல் வளரும் தேங்காய் மற்றும் வாழைப்பழங்களை நாம் கடவுளுக்குப் படைக்கின்றோம்.
இதே போல வெற்றிலை பாக்கு வைத்து பூஜை செய்கின்றோம். அவற்றை நாம் கட்டாயம் உண்டு இரும்புச் சத்து மற்றும் துவர்ப்புச் சத்தினை பெறவேண்டும். வெற்றிலை போடும் பழக்கம் இல்லை என்று அதனை வாட விட்டோ அல்லது உலர்ந்த பிறகோ குப்பையில் போடக் கூடாது.
சுயம்பு விநாயகர் கோயில் அமைந்துள்ள இடம்:
B54 பிளாக்
ரேஷன் கடை அருகில்
TNHB குடியிருப்பு வளாகம்
DRO காலனி
கே புதூர்
மதுரை – 625007
சில இடங்களில் சுயம்புவாகவே விநாயகரது உருவம் அரச மரத்தில் உருவாகி அதற்கு மிகப் பெரிய அளவில் வழிபாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. இயற்கையே விநாயகரது உருவம் இப்படித்தான் இருக்கும் என்பதனை உணர்த்தும் போது நம்மையும் அறியாமல் நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு. அது தான் ஆண்டவன் என்பதனை நினைக்கும் போது புல்லரிக்கின்றது. இயற்கை விநாயகர் உருவத்தினையும் நாகம்மன் உருவத்தினையும் எப்படி வெளிப்படுத்தி இருக்கின்றது என்பதனை மேற்காணும் படங்கள் நமக்கு கட்டாயம் உணர்த்தும்.
அரச மர சுயம்பு விநாயகருக்கு நடைபெறும் வழிபாட்டினை வீடியோவை கிளிக் செய்து கண்டு மகிழுங்கள்.
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.