ரம்ஜான் நோன்பு மற்றும் ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்கள்.
அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்மந்தம் என பலர் கேள்வி கேட்டு நாம் பார்த்திருக்கின்றோம்.
கேள்வி சம்மந்தம் இல்லாதது போலத் தோன்றும். ஆனால் சம்மந்தம் இருக்கின்றதா அல்லது இல்லையா என யாரும் யோசிப்பதில்லை.
ஹிந்து மதத்தில் அமாவாசை என்பது வளர்பிறை ஆரம்பத்தின் முதல் நாள் எனவும் பௌர்ணமி என்பது தேய்பிறை ஆரம்பத்தின் முதல் நாள் எனவும் அதற்குப் பின்னர் வருகின்ற அடுத்தடுத்த நாட்கள் பின்வருமாறும் சொல்லப் படுகின்றன.
1. அமாவாசை அல்லது பௌர்ணமி
2. பிரதமை
3. துவிதியை
4. திரிதியை
5. சதுர்த்தி
6. பஞ்சமி
7. சஷ்டி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. தூவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பௌர்ணமி அல்லது அமாவாசை
மேலே இருந்து கீழ் வரை அமாவாசையில் ஆரம்பித்தால் வளர்பிறை நாட்கள் பௌர்ணமியில் ஆரம்பித்தால் தேய்பிளை நாட்கள் எனவும் சொல்லப்படுகின்றன.
ஹிந்து மதத்தில் அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் திதி மற்றும் சில செயல்கள் நடைபெறுகின்றன. அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை அன்று பல செயல்களைச் செய்யாமல் ஒதுக்கி விடுவார்கள்.
அதற்கு அடுத்து வருகின்ற துவிதியை திதியன்று பிறைச் சந்திரன் வானில் தோன்றும். அச்சமயம் வட்ட வடிவமாக உள்ள ஏதேனும் ஒரு நாணயத்தினை வலது கையில் கட்டை விரல் மோதிர விரல் மற்றும் நடு விரல் ஆகியவற்றுக்கு இடையே வைத்துக் கொண்டு ஆள்காட்டி விரலினால் அந்த நாணயத்தின் வட்டப்பகுதியினை தடவி விட்டுக் கொண்டே சந்திர தரிசனம் மேற்கொள்வார்கள். சந்திர தரிசனம் மேற்கொண்டதற்கு அடுத்த நாளான திரிதியை திதியன்று சுப காரியங்களுக்கான பொருட்களை முதல் நாள் சந்திர தரிசனம் செய்ய உபயோகப்படுத்திய நாணயங்களைக் கொண்டு வாங்க ஆரம்பிப்பார்கள். அவ்வாறு செய்வதால் தமது இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். ஆனால் மூன்றாம் பிறையென எண்ணிக்கொண்டு நான்காம் நாளன்று பிறையினை பார்த்து விட்டால் ஞாபக மறதி போன்றவை வரும் என்று பார்த்த பின்னர் யோசிப்பார்கள்.
அதே போல ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன என்று சொல்லி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி என ஏழு கிரகங்களையும் ராகு கேது என இரண்டு சாயா கிரகங்களையும் சேர்த்து நவ கிரகங்கள் என்று அதற்கான ஜோதிட சாஸ்திரம் என்று ஒன்றினை உருவாக்கி அதனை பின்பற்றுகின்றார்கள்.
இவை தவிர பூமிக்கு சந்திரன் உப கிரகம் என்றும் சந்திரன் பூமியை சுற்றி வருவதாகவும் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனை சுற்றி வருவதாகவும் பூமி சூரியனை சுற்றி வரும் காலத்தை 60 நாளிகைகளாகக் கணக்கிட்டு சூரிய உதயத்திலிருந்து மறு நாள் சூரிய உதயம் வரையில் கணக்கிடுகின்றார்கள்.
ஹிந்துக்கள் அமாவாசை முடிந்த மூன்றாம் நாளன்று அதாவது துவிதியை திதியில் சந்திர தரிசனம் மேற்கொள்கின்றார்கள். சந்திர தரிசனம் மாலையில் தான் தெரியும். அமாவாசை முடிந்த 24 மணி நேரத்திற்குப் பின்னர் அதாவது பிரதமை திதி முடிந்தவுடன் பிறை தெரியும். அப்போது பகல் நேரமாக இருந்தால் பகல் நேரமாக இருக்கும் இடங்களில் பிறை தெரியாது. இரவில் அல்லது மாலைப் பொழுதில் தான் தெரியும். அவ்வாறு தெரியும் பிறையினை ஹிந்துக்கள் மூன்றாம் பிறை அல்லது சந்திர தரிசனம் என்று சொல்கின்றார்கள்.
ஹிந்துக்கள் சந்திர தரிசனம் என்று வளர் பிறையினை பார்க்கும் அதே பிறையினை பார்த்த பின்னர் தான் இஸ்லாமியர்கள் எந்த சடங்கினையும் ஆரம்பிக்கின்றார்கள். இஸ்லாமியர்களுக்கு பிறை தென் படுவது தான் முக்கியம். நான் பார்த்தால் தான் ஒப்புக் கொள்வேன் என்று யாரும் சொல்வதில்லை. பிறை எங்கு தென்பட்டாலும் அதனை பள்ளிவாசல் மூலமாக தலைமை காஜியிடம் தெரிவித்து தலைமை காஜி பிறை தெரிந்து விட்டது என்று சொன்னால் தான் பண்டிகைக்கான துவக்கத்தை மேற்கொள்ள முடியும். இது தான் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்மந்தம் என்னும் கேள்விக்கான பதில்.
இதன் படி ஒவ்வொரு வருடமும் தினசரி நாட்காட்டியில் ரமலான் மாதம் ஆரம்பம் என்று ரமலான் தேதி 1 என குறிப்பிட்டு இருந்தாலும் கூட அதற்கு முந்தைய நாள் எங்கேனும் பிறை தென்பட்டு அந்தப் பிறையினை தலைமை காஜி உறுதிப்படுத்திய பின்னர் தான் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு துவக்குவார்கள்.
முஸ்லீமாக பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் தினமும் ஐந்து வேளை தொழுகை நடத்த வேண்டும். இஸ்லாமியர்களுக்கு உருவ வழிபாடு இல்லையென்ற போதிலும் மெக்கா மதீனா அமைந்துள்ள திசை நோக்கி வழிபாடு செய்வதன் காரணமாக அவர்கள் தொழுகை மேற்கொள்ளும் திசை இடத்திற்கு இடம் மாறுபடும். தொழுகைக்கான நேரம் இடத்திற்கு இடம் சில நிமிடங்கள் மட்டும் மாறுபடும். முஸ்லீம்கள் செய்ய வேண்டிய தொழுகைகள் பின்வருவன.
• ஃபஜ்ர் (சூரிய உதயத்திற்கு முன்னால்)
• துஹ்ர் (பிற்பகல் ஆரம்பம்)
• அசர் (பிற்பகல் நடுவில்)
• மக்ரிப் நமாஸ் (சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர்)
• இஷா (இரவு இருள் கவ்வியவுடன்)
ரம்ஜான் நோன்பு கடைப் பிடிக்கப் படும் சமயம் சூரிய உதயத்திற்கு முன்னர் நோன்பினை ஆரம்பித்து மக்ரிப் நமாஸ் தொழுகையை சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் முடித்து விட்டு பள்ளி வாசல்களில் கொடுக்கப் படுகின்ற நோன்புக் கஞ்சியை குடித்து நோன்பினை முடித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வழக்கம் போல உணவு உண்ணலாம். ரம்ஜான் நோன்பு என்பது சூரிய உதயத்திற்குப் முன்னரும் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னரும் எச்சிலைக் கூட விழுங்காமல் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படுவது ஆகும்
நோன்பு காலங்களில் தவறாது மேலே குறிப்பிட்ட ஐந்து தொழுகைகளையும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அனைவரும் அனைத்து வகை தொழுகைகளையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. மேலே குறிப்பிட்டு ஐந்து தொழுகைகளை மாத்திரம் மேற்கொண்டால் போதும். அதற்கு மேற்பட்ட தொழுகைகள் அதாவது இரவு நேரத்தில் எல்லாம் வல்ல இறைவன் பூமியை நோக்கி வரும் காலத்தில் "தஹாஜ்ஜுட்" என்று சொல்லப்படுகின்ற இரவு நேர தொழுகை இருந்தாலும் அதனை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் அவசியமில்லை.
முஸ்லீம்களுக்கு ஐந்து கடமைகள் உள்ளன.
1. கடவுள் ஒருவனே என்னும் திடமான நம்பிக்கை
2. இறை வழிபாடு அதாவது தொழுகை
3. ஜகாத் என்று சொல்லப்படுகின்ற ஈகை
4. ரம்ஜான் உண்ணா நோன்பு கடைப் பிடித்தல்
5. ஹஜ் புனித யாத்திரையில் மெக்கா செல்லுதல்
முஸ்லீம்கள் செய்ய வேண்டிய ஐந்து கடமைகளில் இரண்டு கடமைகள் அதாவது தொழுகை மற்றும் உண்ணா நோன்பு ஆகியவை ரம்ஜான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உடல் நலமற்றவர்கள் பலவீனமானவர்கள் வயது முதிர்ந்தவர்கள் என விலக்கு உண்டு. காரணம் ஒரு சர்க்கரை நோயாளி குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால் மயக்கமடைந்து விழுந்து விடுவார். அதே போல உடல் பலவீனமானவர்கள் சாப்பிடாமல் இருந்தால் சுகவீனமடைவார்கள். எனவே ரம்ஜான் நோன்பு காலத்தில் உண்ணா நோன்பினை கடைப்பிடிக்காமல் தொழுகையினை மாத்திரம் செய்ய முடியும்.
முஸ்லீம்கள் உண்ணா நோன்பினை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்களிடையே பொறுமை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து சக மனிதர்களிடையே ஒற்றுமையையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதலையும் மேம்படுத்துகின்றது.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் மற்றும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் ரம்ஜான் நோன்பு கடைப்பிடிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனது முஸ்லீம் நண்பர் ஒருவருடைய இல்லத்திற்கு நான் அடிக்கடி சென்று வருவேன். என்னைக் கண்டதும் அந்த வீட்டில் உள்ள அனைவரும் தம் குடும்பத்தில் ஒருவர் போல என்னை அன்புடன் வரவேற்று உபசரிப்பார்கள். அந்த அளவிற்கு நான் அந்த குடும்பத்துடன் நெருக்கமாகப் பழகி வருகின்றேன்.
கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதியன்று ரம்ஜான் மாதம் முதல் நாள். அதற்கான பிறை 24.4.2020 அன்று தெரிந்து விட்டது. எனவே 25.4.2020 முதல் ரம்ஜான் நோன்பினை முஸ்லீம் பெருமக்கள் அனைவரும் ஆரம்பித்தனர். அதே நிலை தான் அடுத்த ஆண்டும்.
ரம்ஜான் மாதத்தில் மாத்திரம் அவர்களின் இல்லத்தில் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால் அன்பான உபசரிப்பு அதாவது பகல் நேரத்தில் விருந்தோம்பல் இருக்காது. காரணம் அவர்கள் அனைவரும் உண்ணா நோன்பில் இருப்பது. ஆனால் நான் அந்த காலங்களில் நோன்பு முடிந்தவுடன் உண்பதற்கு என்று இனிப்பு பண்டங்கள் கொடுத்து விட்டு வருவேன். இது பல வருடங்களாக வாடிக்கையாகி விட்டது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக அது தடைபட்டு விட்டது.
இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு ஆரம்பிக்க வேண்டும். வழக்கம் போல் நான் அவர்களுக்கு போன் செய்து ரம்ஜான் நோன்பு ஆரம்பித்து விட்டீர்களா எனக் கேட்ட சமயம் அவர்கள் மிக மிக சந்தோஷமாக நோன்பினை ஆரம்பித்து விட்டோம் எனச் சொன்னார்கள். சென்ற ஆண்டினைப் போல தடங்கல்கள் தடைகள் இல்லாத காரணத்தால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
பெண்களில் ஒருவர் கர்ப்பமாகவும் ஒருவர் தாய்ப்பால் ஊட்டிக் கொண்டும் இருப்பதால் இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பினை அனைவரும் கடைப்பிடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் மதினா நகரத்திலுள்ள மஸ்ஜிதில் உறையாற்றிக் கொண்டிருந்த சமயம் தமக்கு எல்லாம் வல்ல இறைவன் இறுதி தீர்ப்பு வழங்கும் நாள் நெருங்கி விட்டதாகவும் தமது வாழ்நாளில் இறைவனின் வழிகாட்டுதலின்படி கடமைகள் செய்வதில் ஏதேனும் தவறுகள் செய்து துன்பம் நேர்ந்திருந்தால் அதனைச் சொல்லுமாறும் குழுமியிருந்தவர்களிடத்தில் கேட்டார்.
அந்த சமயத்தில் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்த போதிலும் உகாஷா என்னும் தோழர் எழுந்து நின்று இறை தூதரிடத்தில் தமக்கு ஒரு குறை உண்டு எனச் சொன்ன சமயம் சஹாபா பெருமக்கள் அனைவரும் சினத்துடன் அவரைப் பார்த்தனர் அதனைக் கண்ணுற்ற இறைதூதர் அனைவரையும் சாந்தப்படுத்தி உகாஷாவிடத்தில் என்ன குறை எனக் கேட்டார்.
அப்போது நபிகள் நாயகம் ஒட்டகத்தின் மீதமர்ந்து செல்லும் வேளையில் சாட்டையை சுழற்றி ஒட்டகத்தை அடித்த சமயம் ஒட்டகத்துடன் நடந்து சென்ற தம்மீது சாட்டையடி விழுந்ததெனக்கூறி அதற்கு பதிலாக நபிகள் நாயகத்தை உகாஷா அடிக்க அனுமதி கேட்டார். நபிகள் நாயகம் மறுப்பேதும் தெரிவிக்காமல் எழுந்து நின்று அடிக்குமாறு கேட்டசமயம் உகாஷாவை அடிக்க பயன்படுத்தப்பட்ட சாட்டை நபிகள் நாயகத்தின் இல்லத்தில் இருப்பதாகவும் அதனை எடுத்து வரச் சொல்லுமாறும் கேட்டார். உடனே நபிகள் நாயகம் அவர்கள் அவரது நண்பரான பிலாலை அனுப்பி சாட்டையினை எடுத்துவரச் சொன்னார்.
நபிகள் நாயகத்தின் வீட்டிலிருந்து சாட்டையினை அருமை மகள் பாத்திமாவும் பேரன்கள் அசன் உசைனும் கண்ணீர் மல்க எடுத்துத்தர அதனை பிலால் மஸ்ஜிதுக்குக் கொண்டு வந்தவுடன் நபிகள் நாயகம் சாட்டையினை உகாஷாவிடம் கொடுக்க உகாஷா ஒட்டகத்தின் மீதமர்ந்து கொண்டு அடித்த சமயம் தாம் சட்டையின்றி இருந்ததாகச் சொல்லி சட்டையினை கழற்றும்படி கேட்டுக்கொள்ள நபிகள் நாயகம் அவர்கள் சட்டையினைக் கழற்றியவுடன் உகாஷா தம் கையிலிருந்து சாட்டையினை தூக்கியெறிந்து விட்டு நுபுவத்தொளிரும் நபிகள் நாயகத்தின் முதுகில் முத்தமிட்டார். உகாஷா மீண்டும் மீண்டும் முத்தமிட்டதனைக் கண்ட சஹாபாக்கள் அனைவரும் வாழ்த்தினார்கள். இறைதூதர் தம்மை சாட்டையால் அடிக்க நினைத்த அதே சமயம் தமது முதுகில் ஒளிரும் நுபுவத்தை வெளியுலகிற்கு பறைசாற்றிய உகாஷாவிற்கு சொர்க்கம் கிடைக்க சிறப்புத் தொழுகை மேற்கொண்டார். இதன் காரணமாக இஸ்லாமியர்கள் அனைவரும் தொழுகை முடிந்தவுடன் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து முத்தமிட்டு மகிழ்கின்றார்கள்.
கடந்த இரண்டு வருட காலமாக சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்ட காரணத்தால் இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி முத்தமிட்டு ஆசி வழங்குவதனை நிறைவேற்ற இயலாமல் தவித்தார்கள். இந்த ஆண்டு இஸ்லாமியர்கள் அனைவருக்கும் குதூகலமான ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதில் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனக்குக்கூட எனது இஸ்லாமிய நண்பர்களின் முத்தம் அதாவது ஆசி இந்த ஆண்டு கிடைக்கும் என்பதனை நினைத்து மிக்க மகிழ்ச்சி.
ரமலான் எனச் சொல்லப்படுகின்ற ரம்ஜான் பண்டிகையினை இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மிக மிக உற்சாகமாகக் கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும்
ரம்ஜான்
ரமலான்
வாழ்த்துக்கள்